Monday, May 07, 2007

மூன்றாவது கொம்பு


சில சந்தோச தலைக்கண தருணங்களில்
சந்தேகமில்லாமல் உணருகின்றேன்!
தலையில் முளைக்கும் அந்த இரு கொம்புகளை,
அபூர்வமாய் மூன்றாகவும்!

பலரின் கைகள் முயலுகின்றன உடைப்பதற்கு
ஆயுதமாக வார்த்தைகளாலும்,வாத்தியங்களாலும்,
கூர்ந்து பார்த்தால் என் பின்னந்தலையிலிருந்தும்
இருகைகள் கிளம்பி கொம்பின் மேல் ஆயத்தமாக!

கைகளைப் பார்த்து வேதனையான நடிப்புடன்
கை கொட்டிச் சிரிப்பதற்கு அதிகநேரம் முடியவில்லை!
தயவுசெய்து உடைத்தெரியுங்கள் தாங்கிக்கொள்கிறேன்,

அவைகளை உள்ளே அழுத்தி காணாமல்
போக்க வேண்டுமென்ற
உங்களின் முயற்சியை விட்டுவிடுங்களேன்!
அனுபவிப்பவனுக்கு மட்டுமே வேதனைகள்!

அன்புடன்...
சரவணன்.

Friday, May 04, 2007

சென்னைப்பதிவர்கள் சந்திப்பில் - விடுபட்டவை சுவாரஸ்யத்துடன் - நிறைவுப் பகுதி

சந்திப்பு பற்றிய முதல் பகுதிக்குச் செல்ல இங்கே கிளிக்கவும்!

பார்க்கிலிருந்து வெளிவந்த போது பதிவர்களின் எண்ணிக்கை 20 தாக இருந்தது.சந்திப்பிற்கு வந்த பதிவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டியவர் திரு.வினையூக்கி அவர்கள்,வந்த பதிவர்களில் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டவர் இவரே!அவரிடம் சிறிது நேரம் பேசினேன் அப்பொழுது தங்களைப் பார்த்தால் மானுஷ்யபுத்திரன் நினைவுக்கு வருகிறார்,தாங்களும் அவர்போல் நிறைய எழுதி பெயர் பெற வேண்டுமென்றேன், அதற்கு மானுஷ்யபுத்திரன் அளவிற்க்கு முடியாவிட்டாலும் என்னால் இயன்ற அளவிறக்கு முயல்வேன் என்றார்.

எங்கநேரம் வெளியிலிருந்த பொட்"டீ"க்கடையில் டீ இல்லை! சரி என்று சிலர் ஜீஸும், சிலர் மோரும் குடித்தோம்! (ஸ்பான்சர் யார் என்று இதுவரை தெரியவில்லை! அனேகமாக மொட்டையாக இருக்கலாம்,யாரோ அவருக்கு ஒரு நன்றி!)அப்பொழுது சிறில்அலெக்ஸ் மோர் குடிக்கும் நேரமா இது? என்று தனது பீர் தாகத்தை நினைவுப் படுத்தினார்.பொன்ஸ் அக்கா என் அருகில் வந்து இந்த பதிவர் சந்திப்பு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது(நாகர்கோவில் சந்திப்பு)மாதிரி இல்லையே? என்றார், நானும் இல்லை,நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றேன். பின் அனைவருக்கும் எள்ளுருண்டை கொடுத்தார்.உடனே நமது "கலாய்த்தல்"சிபி, இது சாப்பிடுவதற்கு அல்ல மொட்டையில் அடிப்பதற்கு பாகச மகளிரணியால் வழங்கப்படுகிறது என்றதும் அனைவரும் சிரிக்க! அப்பாவியாய் பாலபாரதி மொட்டையில் கைவைத்து மறைத்துக் கொண்டார்! பாஸ்டன்பாலா இரவே பாஸ்டன் கிளம்பவேண்டி இருப்பதால் அனைவரிடமும் விடை பெற்றார்.

மகரிஷியை பார்த்தாயிற்று வாருங்கள் மகிரிஷி தீர்த்தம் குடிக்க என்று சிபியார் வேண்டுகோள் வைக்க! அதற்காகத் தானே காத்திருந்தோம் என்று பார்போற்றும் பதிவர்கள் அடுத்து சென்றது பார் நோக்கி!

பதிவர்கள் கிடைத்த வாகனத்தில் தொற்றிக் கொள்ள ஓகையாரின் கார் எங்களுக்குக் கிடைத்தது! காரின் முன்னிருக்கையில் ஓகை, வரவணைசெந்தில், பின்னிருக்கைகளில் இடதுபுறம் சிபி, வலதுபுறம் ஓசைசெல்லா நடுவில் நான்! கார் சென்னை போக்குவதத்தில் போதை(?)யில் போவதுபோல் மிதந்து சென்றது,

காரில் செல்லும் போது நடந்த உரையாடல்,

வரவணை:-செல்லா, உங்களின் பதிவுகளைப் பெண்கள் அதிகம் படிக்கின்றனர்,(இது இவருக்கு எப்படித் தெரியும்?), நன்றாக இருக்கின்றதாம்,என் நண்பர்(பெண் நண்பியாக இருக்கலாம்) செல்லமாக உங்கள் தலையில் குட்டச் சொன்னார் என்றார்(பாலபாரதி நமது நண்பர் வரவணையின் குட்டை உடைக்கவும், இல்லையேல் உம்ம மண்டை உடையும்).

சிபி:- ஓகை தாங்கள் பேராசிரியரா?
ஓகை:- இல்லை! ஏன்?
சிபி:-தங்களின் ஒருபதிவில்,பதிவில் உடன்பாடில்லை என்றும் எதிர்மறையாகவும் பின்னூட்டமிட்டிருந்தேன், அதற்கு ஒருபதிவர், அவர்(ஓகை)பேராசிரியர் போன்று தோன்றுகிறது,கவனம் என்று கூறியிருந்தார்,அதான் கேட்டேன்.
ஓசை செல்லா: ஏன் ஓகை பேராசிரியராக இருந்தால் எதிர்மரைப் பின்னூட்டம் போடக் கூடாதா? யாருடைய பதிவில் நமக்கு உடன்பாடில்லையோ அதில் எதிர்த்து பின்னூடமிடுவது தவறில்லை,அது ஓகையாக இருந்தாலும் விதிவிலக்கில்லை!

(நாங்கள் சென்றது ஓகையின் காரில்!)

பின் நான் சிபியிடன் இந்த எலிக்குட்டி சோதனை என்றால் என்ன? என்றேன்.அதற்கு அவர் அதைப் பற்றி சிறிது விளக்கினார், பின் எலிக்குட்டி பற்றி திரு.டோண்டு அவர்களுக்குத்தான் நன்றாக தெரியும், நம்பர் தருகிறேன் பேசுறியா? என்றார். நான் உடனே, எலிவாலைப் பற்றிக் கேட்டால் நீர் புலிவாலை புடிக்கச் செல்லுகின்றீரே என்றேன்.(டோண்டு கோச்சுக்காதீங்க சும்மா டமாசு!)

இப்படியாக ஓகையின் கார் ஒரு பாரின் முன் நின்றது. அங்கு முன்னமே குடிமகன்களால் நிரம்பிவழிய, மற்றவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று தெரியாத நிலையில் (நம்மை விட்டு போயிட்டாங்களோனு வருத்தம் எனக்கு) தருமிக்கு கைத்தொலைபேசினார் வரவணை, பின் "ஓகையின்"கார் EAGLE பார் நோக்கி பறந்தது! ஓகையின் வீடு அருகிலேயே இருப்பதால் காரை வீட்டிலேயே பார்க் செய்துவிட்டு வந்து விடுவதாக அப்"போதை"க்கு எங்களை EAGLE-ன் முன் இறக்கிவிட்டுச் சென்றார்,அங்கு நமது பதிவர்கள் காத்திருந்தனர்,அங்கும் தரைத்தளம் நிரம்பியிருந்தது! எனவே எங்களை அடுத்த(இரண்டாவது) தளத்திற்க்கு போகச் சொன்னார்கள்!(சந்திப்பில் பதிவுகளை அடுத்த தளத்திற்கு கொண்டுசெல்லவேண்டுமென்ற கேரிக்கை நினைவில் வந்துபோனது! பதிவு போகாவிட்டால் என்ன,பதிவர்களாவது போவோம்!)படியில் ஏறுவது சிரமமாக இருந்தது உடனே ஒரு அனானி கமெண்டு:- ஹிம்!இன்னும் தண்ணீயே அடிக்கலை,அதுக்குள்ள தலை சுத்துதே என்று!

படியில் ஏறும் போது கருப்புநிற தேனீர்ச்சட்டை அணிந்திருந்த இளைஞர் தருமி என்னிடம் எங்கிருந்து வருகிறேன், தொழில் பற்றி விசாரித்தார்.சுதந்திரமாக விவாதிப்பதற்கு ஏற்றாற்போல் இரண்டாவது தளத்தில் வேறு யாருமில்லை! வட்டமாக அமர்ந்தோம்!நான் , எனது இருபுறமும் சிபி மற்றும் "7அப் புகழ் "லக்கி, ஏனையோர் ரோஜா வசந்த்,ஓகை, ஓசை செல்லா,சிரில்,மற்றும் பெயர் மறந்த இருவர். மற்றவர்கள் எல்லாம் ஹாட்டாக அடிக்க என்னுடன் சேர்ந்து பியர் அடித்த பியரர் திரு.ரோசவசந்த், சிக்கன், மட்டன், மீன் மற்றும் சில வெஜிடேரியன் ஐட்டங்களும் வந்தன, சிறிது நேரத்தில் களை கட்டியது அந்தத் தளம்,

ஆரம்பம் மங்களகரமாக இருக்கவேண்டும் என்பதாலோ என்னவோ பேச்சு சிம்ரன் ஆப்பக்கடை, நமீதா ரசிகர் மன்றம் என்று போனது, சிபி உடனே தருமியிடன் உங்களுக்கும் இவர்கள் தானா? என்று வம்பிழுத்தார்.அதற்கு தருமி இவர்களில்லை....... என்று இழுத்து சிரித்தார், பின்ன யாரு ? என்று கேட்டதற்கு, அசின் தான் தனக்குப் பிடிக்கும் என்று தனது இளமையை நிருபித்தார்.சிறிது நேரத்தில் இரண்டாவது தளம் விவாதக் களம் ஆனது.சீரியஸான விவாதங்கள், இங்கும் நாகரீகமாகவே!

லக்கி தண்ணீ அடிக்காததால் நான்-வெஜ் அவரிடமிருந்து தள்ளியே இருந்ததை மற்றவர்கள் "தள்ளி"க் கொண்டிருந்தனர் , நான் சில ஃபீஸ்களை எடுத்துக் கொடுத்தேன், அவ்வளவு நேரம் சீராக இருந்த சிபியார் ஒரு லார்ஜ் போனதும் சேஷ்டைகளை ஆரம்பித்தார். அதாவது ஒருகாலத்தில் தான் புறாவிற்கு கறி கொடுத்ததாகவும்,எனவே தனக்கு தற்பொழுது புறாவின் கறி வேண்டுமென்றும் "பறக்க" ஆரம்பிததார். அவரை சமாதானம்"படுத்த" சிறிது நேரமானது! சிபி எத்தனை சிகரெட் அடித்தார் என்ற கணக்கெல்லம் நமக்கெதுக்கு அதை மறக்கும்படியும் சொல்லிவிட்டார்.கையில் வைத்திருந்த ஒரு முழு பாக்கெட் காலிபண்ணிவிட்டு அடுத்த பாக்கெட் ஆர்டர் பண்ணியது மட்டுமே நினைவில். பதிவர்களின் பேச்சு இடஒதுக்கீடு,ஆரிய-திராவிட ஆத்திக-நாத்திகம் பக்கம் போனது, நானும் சிபியும் இரண்டுபக்கமும் கலாய்த்தல் கமெண்டுகள் மட்டும் போட்டு விட்டு சிரித்துக் கொண்டிருந்தோம்! அருகில் இருந்த லக்கியாரை திடீரென காணவில்லை! எங்கே?என்று பார்த்தால் ஓகைக்கும்,ஓசைசெல்லாவுக்கும் நடுவில் போய் கன்னத்தில் கை வைத்தபடி அவர்களிருவரின் விவாதங்களை சீரியசாக கவனித்துக் கொண்டும் கலந்துகொண்டும் இருந்தார்!

சிறில் என்னிடம் நாகர்கோவிலில் 2 வருடமாக இருகின்றீர்கள் எங்க ஊர் எப்படி என்றார்? நான் நல்லதா நாலு வார்த்தை சொல்லி இருக்கலாம்,அதை விட்டுட்டு கன்யாகுமரி மாவட்டத்தில் பேசப்படும் ஆபாசவார்த்தைகள் குறித்து பேசினேன், அதிலும் குறிப்பாக கடல்புறங்களில் மக்கள் அதிகப்படியாக நாம் சொல்லத் தயங்கும் வார்த்தைகளை வீட்டில் அம்மா, சகோதரி இருந்தால் கூட சிறிதும் கூச்சமின்றி பேசுகின்றனர் என்று எனது சொந்த அனுபவத்தைச் சொன்னேன்! தருமி கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார், சிறிலின் முகம் களையிழந்ததுபோல் தோன்றியதும் எனக்கு வருத்தமாக இருந்தது,உடனே ஊரில் நல்ல விசயங்களையும் சொல்லி சமாதானப்பட்டுக் கொண்டோம்! உடனே லக்கி சென்னையில் பேசப்படும் அந்த மூன்றெழுத்து வார்த்தைப் பற்றியும் மற்றொருவர் மதுரைப் பகுதியில் பேசப்படும் வார்த்தை பற்றியும் பேசினார்கள் இறுதியில்,அப்படிப் பேசுவது அவர்களுக்குத் தவறாகக்தெரியாது என்றும் அது அவர்களின் வட்டார வழக்கு என்றும் பேசி ஒருவழியாக முடிக்கப்பட்டது!

பின் சரியாக 8:45 மணிக்கு என்னை அழைத்துச் செல்லவந்த எனது தம்பி பாரின் கீழ் வந்து கைத்தொலைபேசியில் அழைத்தார், நான் உடனே அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன்,சிறில் கூட, இருங்க சரவணன், பேச்சுலர் தானே இருக்கலாம் தானே, என்று வற்புறுத்தினார்.அனைவரும் "பாதியில்" இருக்கும்போது நான் நடுவில் கிளம்புவதால் பணம் எப்படிக் கொடுப்பது என்று சங்கடம் எனக்கு, எனது நிலைமையை உணர்ந்த சிபி, நீங்கள் செல்லுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார் வாயில் சிகரெட் வைத்தபடி. என்னுடன் நண்பர் லக்கியும் வந்தார்,பின் லக்கி தன் பைக்கில் கிளம்ப நான் கடைசியாக அவரின் கன்னங்களைப் பிடித்து செல்ல முத்தம் கொடுத்து அனுப்பிவிட்டு என் தம்பியின் பைக்கில் நானும் கிளம்பினேன்!இப்படியாக எனது சென்னை பதிவர்களின் சந்திப்பு சந்தோசமாகவும், மன நிறைவுடன் முடிவுற்றது!


அன்புடன்...
சரவணன்.

Thursday, May 03, 2007

சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பில் விடுபட்டவை - சுவாரஸ்யத்துடன்...

சென்னையில் பதிவர் சந்திப்பு 22ஆம் தேதி என்றாலும் நான் 20 ஆம் தேதியே சென்னைக்கு வந்துவிட்டேன்!இந்த சென்னைபயணத்தின் முக்கியக் காரணம் பதிவர்கள் சந்திப்பே! என்வே அந்த 22ஆம் தேதிக்காக காத்திருந்தேன்,

22ஆம் தேதியன்று நானும் எனது தம்பியும் சரியாக 2:50 க்கு நடேசன் பார்க்கில் நுழைந்தோம்!முன்னமே வலைப்பதிவர்கள் பற்றி பல பில்டப்கள் கொடுத்திருந்தேன்,அங்கே உள்ளே இருந்த மண்டபத்தில் சுமார் 25 பேர் குழுமி இருந்ததை பார்த்துவிட்டு இது தான் வலைப்பதிவர்கள் கூட்டம் என்று பெருமையடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு இளைஞனும் யுவதியும் நெருக்கமாக நடந்து வந்தனர்.எங்களைக் கடந்த பின்னும் அவர்களிடையே கொஞ்சல் அதிகமாக இருந்தது ,அவர்களிருவரும் நேராக அந்த மண்டபத்திற்குச் சென்றனர், இதைக் கண்ட என் தம்பி என்னை கேவலமான ஒரு பார்வை பார்த்துவிட்டு, உண்மைய சொல்லு பதிவர்கள் சந்திப்பு தானா?இல்லை வேற எதாவதா என்று இழுழுழுத்தான்?

ஐய்யயோ! இதென்ன புது வம்பு என்று நினைத்து விட்டு மா.சிக்கு கைத்தொலைபேசினேன் , அனைவரும் மண்டத்தில் அருகில் புல்வெளியில் அமர்ந்திருப்பதாக கூறினார், நான் பதிவர்களுடன் சென்று உட்கார்ந்ததும் என் தம்பி கிளம்பிவிட்டான்(சில பெரிய பதிவர்களை பார்த்ததும் தான், என்னை நம்பி பார்க்கில் விட்டு விட்டுச் சென்றான்) அங்கு சென்று மாசியிடம் வணக்கத்தை தெரிவித்துவிட்டு மற்ற பதிவர்களை முதல்முறையாக பார்ப்பதால் யார் "எது"(பதிவு) என்று தெரியாமல் பொத்தாம் பொதுவாக சிரித்து வைத்தேன்! அருகில் ஒரு குரல் "வாயா மாப்ள உக்காருயா!" என்று பார்த்தால், அது மொட்டை! அது பாலபாரதி என்று புரிந்து கொள்ள எனக்கு அதிகநேரம் எடுத்துக் கொள்ளவில்லை! "அட சும்ம உக்காரு வெயிள்ள கருத்துட மாட்ட மாப்ள" என்று உரிமையுடன் பே(ஏ)சினார் எங்க ஊர்க்காரர்( பாலபாரதி ராமேஸ்வரம் நான் பரமக்குடி இருவரும் வளமையான(??!) இராமநாதபுரம் மாவட்டதை சேர்ந்தவர்கள்). கூட்டம் ஆரம்பிக்கும் முன் சும்மா பேசிக்கொண்டிருந்தனர் அப்பொழுது பேசிய டாப்பிக் - சட்டா"அம்பி".

சரியாக 3 மணிக்கு சாகரன் நினைவு மலர் வெளியீட்டுடன்,அவருக்கு மவுன அஞ்சலி செலுத்திவிட்டு கூட்டம் ஆரம்பமானது.அப்பொழுது பதிவர்களின் எண்ணிக்கை 24 ஐ எட்டி இருந்தது ,நேரம் ஆக ஆக வந்த பதிவர்களின் எண்ணிக்கை 40 ஆனது, என்ன பேசினார்கள் என்பதை பல பதிவர்கள் எழுதி விட்டார்கள்! வெளி நாட்டிலிருந்து அபி அப்பா முதலில் தொலைபேசினார் பலரிடமும் பேசினார்(சித்தப்பு நம்மளை மறந்துட்டீயல்ல! இருங்க அபி பாப்பாகிட்ட சொல்லி உம்மை என்ன பண்ணுறேன்னு). சிறிது நேரத்தில் எனக்கு பிடித்த பதிவர்களில் ஒருவரான கோவியார் தொலைபேசினார் என்னுடனும் பேசவேண்டுமென்று பலமுறை நினைத்ததாகவும் இப்பொழுதே முடிந்தது என்றார், நானும் சந்தோஷப்பட்டேன்!

சிறிது நேரத்தில் ஓசை செல்லா என் அருகில் வந்து உக்கார்ந்தார், இங்கு ஒரு விசயம் சொல்ல வேண்டும் மதியம் 1 மணிக்கு நான் டி.நகர் - ரங்கநாதன் தெருவில் தம்பியுடன் பர்ச்சேஸ் பண்ணீக் கொண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்தில் செல்லாவை பார்த்தேன், அவரின் புகைப்படத்தை முன்னமே பார்த்திருந்ததால் எளிதில் அடையாளம் காண முடிந்திருந்தது, கையில் ஒரு குழந்தையுடன் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார், சரி அவருக்குத் தெரியாமல் அவரை புகைப்படமெடுத்து அவருக்கு ஷாக் ட்ரீட்மெண்டாக பதிவிடலாம் என்ற ஒரு ஆசை கூட வந்தது, கையிலிருந்த கேமராவும் துறு துறுத்தது, ஆனால் இருந்த கூட்ட நெருக்கடியில் அது சாத்தியப்படவில்லை, நான் யோசிப்பதற்க்குள் அவர் வேறு இடத்திற்கு சென்று விட்டார் அத்துடன் எனது "ஆப்பரேஷன் செல்லா"வை விட்டுவிட்டடேன்!, இந்த நிகழ்வை செல்லாவிடம் கூறியதும் நல்ல வேளை சரவணன் நீங்கள் அப்படிச் செய்யவில்லை! ஏனென்றால் அது தனது நண்பனின் குடும்பம் என்றார், "சென்னையில் செல்லா-குடும்பத்துடன் "என்று நீங்கள் பதிவிட்டிருந்தால் என் வீட்டில் பிரச்சனை தான் என்று சிரித்தார்.பின் செல்லா பேசும் போது புரவுஸிங் சென்டர்களில் முக்கிய உரல்களை பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி இருப்பதாகவும் அவை, தமிழ்மணம், தேன் கூடு மற்றும் சற்றுமுன் என்று கூறும் போது, சற்றுமுன் நிறுவிய சிரிலின் முகத்தில் 1008 வாட்ஸ் பல்பு!

மக்கள் டீவியிலிருந்தும் , குங்குமம் பத்திரிக்கையிலிருந்தும் வந்திருந்தனர். பொன்ஸ் அக்கா வந்ததும் அட்டனென்ஸ் எடுத்துப் பார்த்துவிட்டு முதல் பெயரான உங்கள் நண்பனைப் பார்த்துவிட்டு அருகிலிருந்தவரிடன் சரவணன் யார்? என்று விசாரித்தது என் காதில் விழவே நானாகவே , அது நான் தான் என்றேன்,அவர் புன்னகைத்தார்.என் அருகில் சிபி, யார் என்ன பேசினாலும் எங்களுக்கு மட்டுமே கேட்பதுபோல் கலாய்த்தல் கமெண்டுகள், மற்றொருவர் நவீன் பிரகாஷ் தன் கவிதைக்களுக்கு கரு தேடும் முயற்சியில் தீவிரமாக(??!) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஜிராவிற்கு அவசர அழைப்பு வரவும் உடனே கிளம்பினார், எனதருகில் வந்து கை குழுக்கி விட்டு" உங்கள் நண்பன்" என்று சொன்னதும் உங்களின் பதிவுகள் அனைத்தும் நினைவில் வந்து போனது சரவணன் தொடர்ந்து நல்ல பல பதிவுகள் எழுதுங்கள், என்று என் தலையில் பனங்காயை வைத்தார்! அவருடன் நிறைய உரையாடவேண்டும் என்று நினைத்திருந்தேன், உடனே கிளம்பியது எனக்கு ஏமற்றமே!

பதிவுகளில் நடப்பதுபோன்று அங்கும் அனைத்துவிதமான விவாதங்களும் வந்தன , ஆனால் நாகரீகமான முறையில்,லக்கியாரைப் முன்னமே ஒருமுறை இட்லிவடையாரின் பதிவில் இட்ட படத்தில் பார்த்திருந்ததால் அடையாளம் காண சிரமமாகவில்லை!என் அருகில் வந்த லக்கியிடம் உங்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டேன் என்றேன். எப்படி? என்றார், உங்களின் உடன்பிறப்பு உடையைப் பார்த்துத்தான் என்றேன் சிரித்தார்.(கருப்பு சிகப்பு நிற உடையணிந்திருந்தார்). ஒரு பதிவர் அனைவரிடமும் வந்து ,சென்றுவருவதாக கூறினார், என்னிடமும் கூறிச்சென்றார், பின் கேட்டதற்கு அவர் வடுவூர்குமார் என்றார்கள் அவரிடம் லினக்ஸ் பற்றி சில விசயங்கள் கேட்களாம் என்றிருந்தேன் , அவரிடமும் உரையாடமுடியாமை எனக்கு மீண்டும் ஏமாற்றமே!

ஒருமணி நேரத்திற்க்குப் பின் தனித்தனியாக பிரிந்து சென்றனர் தம் அடிப்பதற்கு! பாஸ்டன் பாலா ஒருகுழுவுடன் திடீரென தீர்த்த(??)யாத்திரைக்கு கிளம்பிவிட்டார்.பொன்ஸ் அக்கா அனைவருக்கும் தட்டைமுருக்கு கொடுத்தார்,பின் நான், சிபி மற்றும் நவீன் மூவரும் வெளியிலிருக்கும் கடைக்குச் செல்ல அங்கு சிபி "மட்டும்" தம் அடித்தார். அப்பொழுது எதிபுறத்தில் இராமகி ஐயா அவர்கள் தமது வாகனத்திற்காக காத்திருப்பதைப் பார்த்திவிட்டு நான் மற்ற இருவரிடமும் அனுமதி பெற்று அவரிடம் சென்று சிறிதுநேரம் பேசினேன், தமிழ்பற்றிய அவரின் பதிவுகளையும் சமீபத்திய சுடர்பதிவில் இடம் பெற்றிருந்த வரலாற்றுச் சம்பவங்களையும் நினைவு கூர்ந்தேன், மகிழ்ந்தார், அவரும் எனது கிராமம் பற்றிய பதிவைப் பற்றிச் சொன்னார்.அவர் கிளம்ப நாங்கள் மூவரும் மீண்டும் பார்க்கின் உள்ளே வந்தோம்!, பதிவர்கள் அனைவரும் தனித்தனிக் குழுவாக நின்று பேசிக்கொண்டிருந்தனர் , தோராயமாக ஒரு 10 குழு அங்கு நின்றிருக்கும்!

பின்னர், வாருங்கள் தேனீர் சாப்பிட என்று பாலபாரதி அழைக்க , அனைவரும் பார்க்கிலிருந்து வெளியேறினோம்!


அடுத்த(நிறைவுப்)பகுதியில்....

* தேனீர் சாப்பிடும் போது பாகச மகளிரணியால் பாலாவிற்க்கு எதிராக நடந்த சதி!

* பார் நோக்கி சென்ற பார்புகழும் பதிவர்கள்

* புறாக்கறி கேட்ட சிபியாரின் லொள்ளூ

மற்றும் சில சுவாரஸ்யமான தகவல்களுடன்........

இரண்டாவது(நிறைவுப்)பகுதிக்கு .இங்கே கிளிக்கவும்


அன்புடன்...
சரவணன்.

போக்குவரத்து நெரிசலில் நான்!




எல்லோரும் ஓடுகின்றனர்!வேறு வேறு திசைகளில்
ஓவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தேடல்!
நேற்று என் அருகில் ஓடியவர்,இன்று எதிர்திசையில்

ஒவ்வொரு முகமாக கூர்ந்து பார்கிறேன்,
அனைத்துமே நன்கு பரிச்சயமான முகங்களே!
ஆனால் எங்கும் தென்படவில்லை எனது மூர்க்க முகம்!

நிம்மதியாய் புரண்டு படுக்கின்றேன்!
ஆம்!கனவுகளில் மட்டுமே சாத்தியப்படும்!
பிறநேரங்களில் அந்த கூட்ட நெரிசலில்
காணாமல் போகும் ஒரு சாமானியன்!

மீண்டும் ஓட்டம் ஆரம்பமாகின்றது!

அன்புடன்...
சரவணன்.